முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருந்தது. பின்னர் அதை 6.5 சதவீதமாகக் குறைத்து, இப்போது 7 சதவீதமாக இருக்கும் என்று கூறி வருகிறது.
இந் நிலையில் பிரபல சர்வதேச பங்கு வர்த்தக நிறுவனமான சிஎல்எஸ்ஏ இந்திய வளர்ச்சி 5.5 சதவீதமாகவே இருக்கும் என்றது. இதே அமைப்பு சில மாதங்களுக்கு முன் இந்திய வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.
அதே போல சிட்டி வங்கியும் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை முதலில் 6.2 சதவீதம் இருக்கும் என்று கணித்துவிட்டு பின்னர் 5.4 சதவீதமாகக் குறைத்தது. மேலும் CRISIL அமைப்பும் தேசிய வளர்ச்சியை முதலில் 6.5 சதவீதம் என்று சொல்லிவிட்டு 5.5 சதவீதமாகக் குறைத்தது.
இந் நிலையில் மூடிஸ் நிறுவனமும் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதமாகவே இருக்கும் என்று கணித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் 9 சதவீத வளர்ச்சியை இந்தியா சந்தித்த நிலையில், இது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து 5.5 சதவீத நிலைமைக்குப் போய்க் கொண்டுள்ளது.
இந் நிலையில் நாடு முழுவதுமே பருவ மழை சரியான நேரத்தில் பெய்யாமல் போன நிலையில், சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், நாட்டின் வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிப்பதும், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதும் பெரும் சவாலான விஷயமாகும்.