மும்பை: பொருளாதார மந்தநிலை மற்றும் எகனாமி கிளாஸ் டிக்கெட்டின் விலை உயர்வு ஆகியவற்றால் பல நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் எகனாமி கிளாஸில் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
உலகப் பொருளாதாரம் மட்டுமின்றி இந்திய பொருளாதாரமும் மந்தமாக உள்ளது. இந்நிலையில் விமான டிக்கெட் அதுவும் குறிப்பாக பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டின் விலை ஒரேயடியாக உயர்ந்துள்ளது. கடந்த 18 மாதங்களில் பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை விமான நிறுவனங்கள் பாதியாக குறைத்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பல்வேறு விமான நிறுவனங்கள் பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை வெகுவாகக் குறைத்துவிட்டு எகனாமி கிளாஸ் இருக்கைகளை அதிகரித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் டெல்லி, மும்பை விமானங்களில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டின் விலை ரூ.29,000 ஆகும். ஆனால் தற்போது அது ரூ.42,000க அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டின் விலை அதிகரித்துள்ளதால் எதற்கெடுத்தாலும் பிசினஸ் கிளாஸில் பயணம் செய்த எக்ஸிகியூட்டிவ்கள் எல்லாம் தற்போது எகனாமி கிளாஸில் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதாரம் வேறு மந்தமாக உள்ளதால் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை எகனாமி கிளாசில் தான் பயணிக்குமாறு அறிவுறுத்துகின்றன. தற்போதுள்ள நிலையில் சில முன்னணி நிறுவனங்களில் கூட எம்.டி. மட்டுமே பிசினஸ் கிளாஸில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்.
இந்தியாவில் உள்ள முன்னணி எக்ஸிகியூட்டிவ்கள் கூட இனி உள்நாட்டு பயணத்தின்போதும் கூட பிசினஸ் கிளாஸில் பணிக்க மாட்டார்கள் என்று மேக் மை ட்ரிப் சிஇஓ மற்றும் துணை நிறுவனரான கேயுர் ஜோஷி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications