நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அடுத்த ஆண்டிற்குள் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அணுமின் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிறகு அவர் கூறியதாவது,
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றியதால் இந்த அனுமதி கிடைத்துள்ளது.
அடுத்த ஆண்டு(2013) குடியரசு தின விழாவின் கொடியேற்றத்தின் போது இந்த அணு மின் நிலையம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கும். 2வது அணு உலையின் மூலமும் மின் உற்பத்தி துவங்குவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு(2013) சுதந்திர தினத்துக்கு முன்பாக கூடங்குளத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலை அமைப்பதற்காக ஒப்பந்தம், இந்தியா-ரஷ்யா நாடுகள் இடையே கையெழுத்தாகி உள்ளது.
அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கூடங்குளம் அணு மின் நிலையம் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பூர்த்தி செய்துள்ளது. மென்நீர் உலைகளை இயக்குவதற்கான லைசென்சை பொறியாளர்கள் பெற்று உள்ளனர் என்றார்.