அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லாததால் இந்த நிலைமைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு ஜுன் மாதத்துக்குப் பின்னர் இதுவரை உயர்த்தப்படவில்லை. டீசலை அதன் உண்மையான விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.15.55 குறைவாகவும், மண்ணெண்ணெயை ரூ.29.97 தள்ளுபடி விலையிலும், சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.231 விலையைக் குறைத்தும் விற்பனை செய்து வருவதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் ரூ.450 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன.
இதனால் இவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசை அந்த நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் வரும் 7ம் தேதி முடிந்த பின்னர் இவற்றின் விலை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், இப்போது மத்திய அரசு ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில், அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இப்போதைக்கு டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.
இது குறித்து மூத்த பெட்ரோலியத்துறை அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருட்கள் விலையை உயர்த்துவது என்பது மிக மிக கடினமான ஒன்று. தற்போதைய சூழலில், இந்த விலை உயர்வு சாத்தியம் இல்லை என்றார்.