அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து மைய சங்கங்களின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு எதிராக அரசும், நிர்வாகமும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டு ஆகியும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பது, பென்சன் பிரச்சனை, கடுமையான வேலை பளு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடந்து வரும் 10, 11, 12, 13, 20, 21 ஆகிய தேதிகளில் போக்குவரத்துக் கழக கோட்டை தலைமை அலுவலங்கள் முன்பு வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 25-ந் தேதி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதனால் அன்று தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாது என்று கூறப்படுகிறது