நெய்வேலி : தற்போது என்.எல்.சி.யிலிருந்து 1,100 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. இதுவே வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 1,400 மெகாவாட்டாக உயர்த்தி வழங்கப்படும் என என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெய்வேலியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நெய்வேலியில் 500 மெகாவாட் திறன் கொண்ட 2வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுற்று மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, முதல் பகுதியில் அக்டோபர் மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படும் என பாரத மிகுமின் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அதே போல 2வது யூனிட்டில் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்கப்படும். இதன் மூலம் என்.எல்.சி. மின் உற்பத்தி 3,240 மெகாவாட்டாக உயரும்.
தற்போது என்.எல்.சி.யிலிருந்து 1,100 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த மின்சாரத்தின் அளவு 2013ம் ஆண்டு மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் 1,400 மெகாவாட்டாக உயர்த்தி வழங்கப்படும்.
தூத்துக்குடியில் என்.எல்.சி.யும், தமிழக மின்வாரியமும் இணைந்து செயல்படுத்தும் நிலக்கரியின் மூலம் இயங்கக் கூடிய 1,000 மெகாவாட் மின்நிலையத்தில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த மின் நிலையத்தின் இரு உற்பத்திப் பிரிவுகளிலும் 2013-14 ம் ஆண்டில் மின்உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 12வது திட்ட கால முடிவில் என்.எல்.சி. நிறுவனம் தனது தற்போதைய பழுப்பு நிலக்கரி உற்பத்தித் திறனான ஆண்டுக்கு 30.6 லட்சம் டன்னிலிருந்து 38.85 லட்சம் டன்னாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல், தற்போதைய மின் உற்பத்தித் திறனை 2,740 மெகாவாட்டிலிருந்து 10,000 மெகாவாட்டாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.