பெங்களூர்: தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தால் பல்வேறு மாநிலங்களிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடிய வடகிழக்கு மாநிலத்தவர் தற்போது கடுமையான வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
கடந்த மாதம் 18-ந் தேதி முதல் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் தென்னிந்திய மாநிலங்களில் தாங்கள் பார்த்து வந்த வேலைகளை அப்படியே உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிப் போயினர். அப்படிச் சென்றவர்களில் இன்னமும் பலர் வேலைக்குத் திரும்பவில்லை.
சொந்த ஊருக்குப் போனவர்கள் வேலை தேடிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை தேடுவதால் அனைவருக்கும் வேலை கிடைக்காத நிலைமையே இருக்கிறது. இதனால் மிகக் குறைந்த ஊதியத்துக்குக் கூட பலரும் போட்டியிடக் கூடிய நிலை இருக்கிறது. அசாமில்தான் இப்படி என்றில்லை..
வதந்தி காரணமாகத்தானே கிளம்பிவந்தோம்.. சரி திரும்பவும் ஏற்கெனவே வேலை பார்த்த இடத்துக்கே செல்லலாம் என்று திரும்பி வரும் வடகிழக்கு மாநிலத்தவருக்கும் பெருத்த ஏமாற்றம்தான். முன்னர் தாங்கள் பார்த்த வேலைக்கு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுவிட்டதால் இங்கும் வேலை இல்லை என்ற நிலைமையிலேயே தவித்து வருகின்றனர்.
பெங்களூரு நகரில் இப்படி பல நூறு வடகிழக்கு மாநிலத்தவர் வேலை இல்லாமல் தத்தளித்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்க சில தன்னார்வ அமைப்புகள் முன்முயற்சிகளை எடுத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications