மத்திய அரசு அறிவித்த டீசல் விலை உயர்வு மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் மானியத்தில் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து இன்று நாடு தழுவிய பந்த் நடைபெற்றது. இந்த நிலையி்ல் விலைவாசி உயர்வு காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களாக கூடி விவாதித்தது. இதன் முடிவில் தற்போதுள்ள அகவிலைப்படியில் 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போது 65 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீமாக வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் நாட்டில் உள்ள 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வதியம் பெறும் 30 லட்சம் பேரும் பயன் பெறுவார்கள். 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு 2012 ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இது குறித்த முறையான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.