தமிழகத்தில் அனல் மின்நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், காற்றாலை மின் உற்பத்தி ஆகியவை மூலம் தினமும் 10 ஆயிரத்து 364 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். எனினும் ஒரு நாளைக்கு தேவை 12 மெகா வாட் மின்சாரமாக இருப்பதால் பகலில் மட்டும் 2 முதல் 3 மணிநேரம் வரை, தேவைக்கு தக்கவாறு மின்வெட்டு இருந்து வந்தது.
நெல்லையில் நேற்றுமுன்தினம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டது. இது மட்டுமல்லாது நேற்று பகலில் மட்டும் 7 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு இருந்தது. விநாயகர் சதுர்த்தி நாளில் முன்னறிவிப்பின்றி மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி இருந்தது. இதனால் மின்வெட்டு நேரம் கணிசமாக அளவு குறைந்தது. தற்போது காற்றாலை மூலம் மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பகல் நேரம் மட்டுமல்லாது இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்பட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி 191 மெகா வாட்டாக குறைந்துள்ளதால் மின்வாரியம் செய்வறியாது திகைத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் 12 மணிநேர மின்தடை அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.