நெல்லை, தென்காசி இடையிலான அகல ரயில் பாதையில் நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையின் துவக்க விழா இன்று நெல்லையில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. லிங்கம், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ரயில் சேவையை துவங்கி வைத்தனர்.
மேலும் நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா, எம்.எல்.ஏ, நைனார் நாகேந்திரன் மற்றும் தென்னக ரயில்வே மதுரை கோட்டமேலாளர் ரஸ்ரோகி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
நெல்லை முதல் செங்கோட்டை வரையுள்ள 17 ரயில் நிலையங்களிலும் புதிய ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை எம்.பி. ராமசுப்பு இந்த ரயிலில் நெல்லை முதல் செங்கோட்டை வரை பயணம் செய்தார். ஆனால் தென்காசி தொகுதி எம்.பி.லிங்கம் நெல்லையில் விழா முடிந்தவுடன் சென்றுவிட்டார்.