நெல்லை: பிஐஎஸ் தரச்சான்று இல்லாத ஸ்டீல் பொருட்களை தயாரிக்கவும், கடைகளில் விற்பனை செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கட்டுமானம் மற்றும் தயாரிப்பு பணிகளில் அபாயகரமான மற்றும் தரக்குறைவான பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் இரும்பு எக்கு பொருட்களின் தரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மத்திய அரசின் இரும்புத் துறை பிறப்பித்துள்ளது. இந்த சட்டம் கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அனைத்து ஸ்டீல் மற்றும் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்போர், வீடு கட்டுபவர்கள், மின் உற்பத்தி கருவிகள் தயாரிப்போர், கனரக இரும்பு தொழிற்சாதனங்கள் தயாரிக்கும் தொழிலகங்கள் மற்றும் இதர உபயோகிப்பாளர்களுக்கும் பொருந்தும்.
மிதமான மற்றும் அதிக வெப்பநிலையில் பயன்படுத்தக்கூடிய கொதிகலன் உள்ளிட்ட அழுத்தம் தாங்கும் கொள்கலன்களை தயாரிக்கப் பயன்படும் இரும்புத் தகடுகள், பொது கட்டுமான பணிகளுக்காக அழுத்தம் குறைந்த இரும்பு, ரீரோலிங் செய்தவற்கான கார்பன் ஸ்டீல், வார்ப்பு, இன்காட், பில்லட் மற்றும் புரூமன், குறைந்த அழுத்த கட்டுமான பொருட்களுகான ஸ்டீல் போன்ற இரும்புகளுக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து தரக்கட்டுப்பாட்டு பதிவு பெற வேண்டும் என மத்திய அரசின் இரும்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.