மூன்று ஷிப்ட் வேலை. வேலைக்கு ஆட்கள் தேவை என்று போர்டுகள் தொங்கிக் கொண்டிருந்த ‘டாலர் சிட்டி' திருப்பூர் நகரம். இன்றைக்கு சாயப்பட்டறை பிரச்சினையினால் நலிந்து போய் விட்டது. அதுதான் பரவாயில்லை வெளிமாநிலங்களுக்குச் சென்றாவது சாயம்போட்டு வந்து தொழிலை ஓட்டிவிடலாம். வாங்கிய ஆர்டர்களை அனுப்பிவிடலாம் என்று நம்பிக்கையோடு இருந்தவர்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப்போட்டுவிட்டது மின் வெட்டுப் பிரச்சினை. திமுக ஆட்சிக் காலத்தில் மூன்று மணிநேரமாக இருந்த மின்வெட்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் 6 மணிநேரமாகி கடைசியில் 8 மணிநேரமாகியது. தற்போது படிப்படியாக உயர்ந்து 14 மணிநேரம் மின்வெட்டு என்றாகிவிட்டது. ஒருநாளின் 24 மணிநேரத்தில் 14 மணிநேரம் மின்சாரம் கிடையாது. உறங்குவதற்கு 6 மணிநேரம் என வைத்துக்கொண்டால் கூட மீதமுள்ள 4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் கூட எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியாத நிலை.
இந்த மின்வெட்டுப்பிரச்சினை பின்னலாடை நகரமான திருப்பூரை முற்றிலும் முடக்கித்தான் போட்டுவிட்டது. பின்னலாடைத் தொழிலைச் சார்ந்த உபதொழில்களும் நலிந்து மூடப்பட்டு வருகிறது. எனவே மின்வெட்டினைக் கண்டித்து அக்டோபர் 3 ம் தேதி சிபிஐ மார்க்சிஸ்ட், சிபிஐ, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் கடை அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருவது என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மின்வெட்டு பிரச்னைக்காக அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து அக்டோபர் 1ம் தேதி ஏற்பாடு செய்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும், அக்டோபர் 3ம் தேதி அறிவித்துள்ள கடையடைப்பு, முழு அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் ஆதரவு தருவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொழில் அமைப்புகள், வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப்போரட்டத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.