சென்னை: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து, காந்தி பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும்.
சென்னையில் மெமோரியல் ஹால் அருகே பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வள்ளுவர் கோட்டத்தில், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இணைந்து காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளன. நம்பிநாராயணன் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை, பேரமைப்பு தலைவர் தொடங்கி வைக்கிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.