திருப்பூரில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் பகல் நேரத்தில் 6 மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது. மாலை 6 முதல் 7 மணிவரையிலும் இரவு நேரங்களில் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. தினசரி 14 மணிநேரம் வரை மின்சாரம் தடை செய்யப்படுவதால் திருப்பூர் நகரின் பின்னலாடை உற்பத்தி தொழிலும் அதைச் சார்ந்த உப தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி பாதிப்பு
திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பனியன் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தொடர் மின்வெட்டு காரணமாக திருப்பூர் கடுமையான நெருக்கடி நிலையை எட்டியுள்ளது. தற்போது 14 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுவதால், திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளுக்கு தற்போது தினமும் 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. நாள் முழுவதும் மின்தடை நீடிப்பதால் திருப்பூர் பனியன் தொழிலகங்களில் 75 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டுப் பிரச்சினையை கண்டித்தும், திருப்பூர் நகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டத்திற்கு சிபிஐ, சிபிஐ (எம் ), மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
வெறிச்சோடிய சாலைகள்
இந்த போராட்டத்திற்கு சைமா, டீமா, டெக்மா, டெக்பா, சிஸ்மா ஆகிய முக்கிய சங்கங்கள் உட்பட சுமார் 50 தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்ததை அடுத்து திருப்பூரில் 80 சதவீத பனியன் மற்றும் அதைச் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்திற்கு வணிக நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர். கடையடைப்பு காரணமாக திருப்பூர் நகரின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அசாம்பாவித சம்பவங்கள் நிகழாதவதையில் தடுக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராயபுரம், காதர்பேட்டை, புதுத் திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா, முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை, சைமா அலுவலகம் அமைந்துள்ள ஹார்விநகர் தொழிற்பேட்டை உள்பட அனைத்துத் தொழிற்பேட்டைகளிலும் பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஒருநாள் வேலை நிறுத்தம் காரணமாக 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும் என்று தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.