கோவை: விசைத்தறித் தொழிலை கிட்டத்தட்ட முடக்கிப் போட்டுள்ள அகோர மின்வெட்டைக் கண்டித்து பல்லடம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைத்தறி நிறுவனங்கள் நாலை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
தொழில் மாவட்டங்களான கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தினசரி அதிகபட்சம் 14 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகிறது. இதனால் தொழில்கள் முற்றிலும முடங்கிப் போயுள்ளன.தொழிலாளர்களும், முதலாளிகளும் கடும் பாதிப்பையும், நஷ்டத்தையும், உற்பத்தி இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.
இந்த இரு மாவட்டங்களிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரு நாளைக்கு ரூ. 120 கோடி அளவுக்கு உற்பத்தி செய்து வருகின்றன. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பல்லடம், சோமனூர், கருமத்தம்பட்டி, சூலூர், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள விசைத்தறிக் கூடங்கள், நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி பல்லடத்தில் காலை 10 மணிக்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதேபோல சோமனூர் பவர்ஹவுஸ் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். நேற்றுதான் திருப்பூரில் ஒரு நாள் பந்த் முழு அளவில் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.