செல்போன்கள், இன்டர்நெட் வருகைக்கு பிறகு இந்தியாவில் கடிதங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது தபால் துறையின் ஸ்பீடு போஸ்ட் என்ற விரைவு கடித சேவை மட்டுமே சிறப்பாக இயங்கி வருகிறது. இதுவும் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பீடு போஸ்ட் சேவையின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முதல் புதிய கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டண முறையின்படி, 50 கிராம் வரையுள்ள கடிதங்கள் உள்ளூர் பகுதிகளுக்கு அனுப்ப ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும். வெளியூர் பகுதிகளுக்கு அனுப்ப ரூ.35 கட்டணம் செலுத்த வேண்டும்.
51 கிராமில் இருந்து 200 கிராம் வரை எடையுள்ள கடிதம் உள்ளூர் பகுதிகளில் அனுப்ப ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே கடிதம் வெளியூர் (200 கி.மீ உள்ளே), ரூ.35 கட்டணம். 201 முதல் ஆயிரம் கி.மீ தூரத்திற்கு அனுப்ப ரூ.40 கட்டணமும் வசூலிக்கப்படும்.
201 கிராம் முதல் 500 கிராம் எடை வரை உள்ள தபால்களை உள்ளூர் பகுதிகளுக்கு அனுப்ப ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும். அதே தபாலை உள்ளூரை கடந்த 200 கி.மீ வரையுள்ள தூரத்திற்கு அனுப்ப ரூ.50 கட்டணம். 201 முதல் ஆயிரம் ஆயிரம் கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களுக்கு அதே கடிதத்தை அனுப்ப ரூ.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் கி.மீ. தூரம் உள்ள இடங்களுக்கு தபால் அனுப்ப கட்டணம் ரூ.90 ஆகும்.
இது குறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
ஸ்பீடு போஸ்ட் கட்டணம் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஸ்பீடு போஸ்ட் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தமிழ்நாடு வட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் ரூ.75 முதல் ரூ.80 கோடி வருமானம் கிடைக்கிறது என்றார்.