சென்னை: தமிழக அரசின் குரூப் 4 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
குரூப்-4 தேர்வுகள் கடந்த ஜூலை 7-ந் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 12 லட்சத்து 33 ஆயிரத்து 731 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் போது வினாத்தாளை சரியாக அச்சிடவில்லை என்று கூறி தேர்வு முடிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குரூப்4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் தேர்வாணைய அதிகாரிகள் கூறுகையில், குரூப் 4க்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்கின்றனர்.
அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.