விருதுநகர்: காது கேளாதோர் ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் செல்போன்களில் பயன்படுத்தும் வகையிலான புதிய கருவியை, விருதுநகர் கலசலிங்கம் பல்கலை கழக மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் பி.டெக் இ.சி.சி பிரிவில் இறுதியாண்டு மாணவர் ஷேக் அப்துல்லா. இவர் தனது இறுதியாண்டு புராஜெக்ட் மூலம் பயனுள்ள கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தார். அதற்காக காதுகோளாதோருக்கான ஒரு கருவியை கண்டுபிடிக்க திட்டமிட்டார்.
இதன் பயனாக காற்று அழுத்த இயக்கத்தில் தம் ஒலியை மாற்றி கிரகித்து கொள்ளும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார். இதன்மூலம் காது கேளாதோர், ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் செல்போனில் பொருத்தி மருத்துவ பரிசோதனை செய்ய முடியும். மேலும் செல்போனில் பேசுவும் பயன்படுத்த முடியும். இந்த கருவிக்கான உற்பத்திச் செலவு ரூ.300 ஆகிறதாம்.
இந்த கருவியை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்புப் பிரிவில் 6 ஆண்டு பி.டெக். படிக்கும் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாத மாணவர்களிடம் செய்முறையாக மாணவர் ஷேக் அப்துல்லா செய்து காட்டினார்.
இதில் ஷேக் அப்துல்லாவின் கருவி முழுதிறனுடன் செயல்பட்டது. இதையடுத்து மாணவரின் புதிய கண்டுபிடிப்பை, கலசலிங்கம் பல்கலை கழக வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் கன்னியப்பன், துறைத் தலைவர் துரைராஜ் ஆகியோர் பாராட்டினர்.