சென்னை: சுகாதாரத்துறையில் ஏஜென்சிகள் மூலம் வேலைக்கு சேர்ந்த 4,500 பேரை பணியில் இருந்து நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத்துறையில், பாராமெடிக்கல் பிரிவில் 12 வகையான பதவிகள் நிரப்பப்பட்டன. இந்த பதவிகளுக்கு தேவையான ஆட்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பாமல் ஏஜென்சி மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 4,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான சம்பளம் அவர்களை பணியில் சேர்த்த ஏஜென்சிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏஜென்சிகள் வாயிலாக பணியில் சேர்ந்த இவர்கள் அனைவரும் சமீப காலமாக தங்களை அரசு ஊழியராக்கி, கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து ஏஜென்சிகள் சேர்க்கப்பட்ட அனைவரையும் பணியிலிருந்து விடுவிக்கவும், அவர்களுக்கு பதிலாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முறையான கல்வித் தகுதி, பதிவு மூப்பு உள்ளவர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்து சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பாராமெடிக்கல் பிரிவில் அயல்பணி நிமித்தம் நியமிக்கப்பட்ட வெளியாட்களை வரும் ஒரு வருடத்திற்குள் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அறிக்கையால் பாராமெடிக்கல் பிரிவில் அயல்பணி நிமித்தம் நியமிக்கப்பட்டவர்கள் இடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications