இந்தியாவில் ரயில் பயணத்தின் போது, எலிகள், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி ஆகியவை பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. ரயில்வே பணியாளர்கள் எவ்வளவு தான் ரயி்ல் பெட்டிகளை சுத்தம் செய்தாலும், இவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால் ரயில்வே துறைக்கு, பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகிறது.
இந்த நிலையில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யுனியன் பொது செயலாளர் என்.கண்ணைய்யாவுக்கு, பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இது குறித்து புகார்களை அளித்துள்ளனர். எனவே ரயில்களில் உலா வரும் எலிகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்பயனாக ரயில் பெட்டிகளில் உள்ள பூச்சிகளை ஒழிக்க தற்போது சென்னையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகில் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் பராமரிக்கும் பணிமனை உள்ளது. இங்கு ரயில் பெட்டிகளில் எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி உட்பட பலவிதமான பூச்சிகளை ஒழிக்கும் வகையில் பியுமிகேசன் சேம்பர் பார் பெஸ்ட் கண்ட்ரோல்' என்ற பெயரிலான நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
80 அடி நீளமும், 12 அடி அகலத்தில் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட எந்திரத்தில் 3 ரயில் பெட்டிகளை உள்ளே அனுப்பி, பெரிய தார்பாயால் ரயில் பெட்டிகள் மூடப்படுகிறது. அதன்பிறகு தார்பாய்க்கு உள்ளே மீத்தேல் புரோமடைஸ்' என்ற ஒரு வகை திரவ வடிவிலான கேஸ் செலுத்தப்படுகிறது.
கேஸ் வெளியே செல்லாத வகையில் கண்ணாடிகள் இறுக்கமாக மூடி விடுகின்றனர். 24 மணிநேரத்திற்குள் கேஸ் தாக்கி, ரயில் பெட்டிகளில் உள்ள பூச்சிகள், எலிகள் ஆகியவை செத்து விடுகின்றன.
அதன்பிறகு ரயில் பெட்டிகள், கண்ணாடி அறையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, ரயில்வே பராமரிப்பு பணியாளர்கள், பாதுகாப்பு கவசங்களுடன் உள்ளே சென்று செத்து கிடக்கும் பூச்சிகளை அப்புறப்படுத்துகின்றனர். அதன்பிறகு மேலும் 24 மணிநேரம் கழித்து, பயணிகளின் பயன்பட்டிற்காக ரயில் பெட்டி அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த முறை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யுனியன் பொதுசெயலாளர் என்.கண்ணைய்யா தெரிவித்தார்.