தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 5 யூனிட்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் சுமார் 1000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த யூனிட்கள், நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தையும் கடந்து இயங்கி வருகின்றன. இதனால் யூனிட்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
கடந்த 10ம் தேதி இரவு 4வது யூனிட்டில் உள்ள ராட்சத கண்டெய்னரில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த யூனிட் நிறுததப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று காலையில் முதல் யூனிட்டில் உள்ள பாய்லர் பழுதானது. எனவே அதன் பழுது நீக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, கடந்த 42 மணிநேரத்தில் மின்தடை நேரம் அதிகரித்துள்ளது. தெர்மல் மின் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் இன்று மதியத்திற்குள் பழுது நீக்கும் பணி முடிவடைந்து, மின் உற்பத்தி சீராகும் என்று மின் உற்பத்தி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு கடந்த 2 மாதங்களில் உராய்வு காரணமாக 3 முறை நிலக்கரி கொண்டு செல்லும் கண்டெய்னர் பெட்டில் தீப்பிடித்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.