சென்னை: பெட்ரோல், டீசலோடு தற்போது சிஎன்ஜி காஸ் விலையும் ஏறிப் போய் விட்டதால் ஆட்டோ கட்டணத்தையும் சென்னை ஆட்டோ டிரைவர்கள் உயர்த்தி விட்டனர். மேலும், வேன் உள்ளிட்டவற்றின் கட்டணமும் உயர்ந்து போய் விட்டது.
தகிக்க வைக்கும் விலை உயர்வு
சமீபத்தில் அடுத்தடுத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதால் வாகனதாரர்கள் குறிப்பாக ஆட்டோ, வேன், லாரிகள் உள்ளிட்டோர் கடும் தவிப்புக்குள்ளானார்கள். இதனால் விலை உயர்வுக்காக காத்திருந்த அவர்கள் தற்போது கட்டணத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளனர்.
சிஎன்ஜியிலும் கை வச்சாச்சு
சென்னையில் பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களுக்கு சமமாக சிஎன்ஜி காஸ் மூலம் ஓடும் ஆட்டோக்களும் நிறைய உள்ளன. தற்போது சிஎன்ஜி காஸ் விலையும் உயர்ந்து விட்டதால் இந்த காஸைப் பயன்படுத்தி ஆட்டோக்களை இயக்குவோர் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
10,000 ஆட்டோக்கள்
சென்னையில் மட்டும் 10 ஆயிரம் ஆட்டோக்கள் சிஎன்ஜி காஸ் மூலம் இயக்கப்படுவதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று தெரிகிறது.
லிட்டர் காஸ் விலை ரூ. 49
சென்னையில் அக்டோபர் 1ம் தேதி சிஎன்ஜி காஸ் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்ததப்பட்டது. இதனால் இந்த விலை தற்போது ரூ. 48.82 ஆக உள்ளது.
வேறு வழியில்லைங்க.. புலம்பும் டிரைவர்கள்
இப்படி காஸ் விலை கடுமையாக உயர்ந்து விட்டதால் வேறு வழியில்லாமல் கட்டணத்தை ஏற்றியுள்ளதாக ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதேபோல காஸில் ஓடும் வாடகைக் கார், மினி வேன்களிலும் கூட கட்டணத்தை ஏற்றி விட்டார்களாம்.