சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையைத் தொடர்ந்து பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பெரும்பாலோனோர் சொந்த ஊருக்கு ஒட்டுமொத்தமாக புறப்பட்டுச் சென்றதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வரும் வாரத்தில் செவ்வாய்கிழமை ஆயுதபூஜை, புதன்கிழமை விஜயதசமி, வெள்ளிக்கிழமை பக்ரீத் என 3 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வாரத்தின் 5 பணி நாட்களில் 3 நாட்கள் விடுமுறை வருவதால் அரசு ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே வேலை நாட்களாகும். இதனால் அந்த நாட்களுக்கு சேர்த்து விடுப்பு எடுத்துக்கொண்டு பெரும்பாலான அரசு ஊழியர்கள் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை முதலே பேருந்து, ரயில்களில் புறப்பட்டு சென்ற வண்ணம் இருந்தனர்.
இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெள்ளிக்கிழமை இம் கிடைக்காதவர்கள் சனிக்கிழமை புறப்பட்டு சென்றனர். இதனால் இரு தினங்களாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் பஸ்களை நாடினார்கள். ஆனால் ஆம்னி பஸ்களிலும் இடம் கிடைக்காமல் பெரும்பாலான பயணிகள் திண்டாடினர்.
மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் மற்றும் கோவை செல்லும் ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருப்பினும் அடித்துப் பிடித்து ரயில்களில் ஏறி ஊருக்கு சென்றனர்.
முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு டிக்கெட் ரிசர்வ் செய்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் திடீரென ஊருக்குப் புறப்பட்டவர்களுக்குத்தான் பேருந்து ரயில்களில் டிக்கெட் மற்றும் இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
விடுமுறையைக் கொண்டாட அதிக அளவில் அரசு ஊழியர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாலும், விடுமுறை தினங்கள் என்பதாலும் சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டது. ஆனால் தொடர் மழை காரணமாக வழக்கம் போல சென்னை போக்குவரத்து சிக்கலாகவே இருக்கிறது.