சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை போக்க, மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரத்தை அளிக்கமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுக்க போவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துளார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, பகல் நேரத்தில் 200 மெகா வாட்டும், இரவு நேரத்தில் 766 மெகா வாட்டும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இது தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக 3,500 மெகா வாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமரை சந்தித்து பேச உள்ளோம்.
மத்திய தொகுப்பில் இருந்து அனுப்பப்படும் மின்சாரம், சில மாநிலங்களில் இருந்து தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரம் திரும்ப அனுப்பப்படுகிறது. அதை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மற்ற மாநிலங்களில் உபரியாக கிடைக்கும் மின்சாரத்தை தென் மாநிலங்களுக்கு வழங்க தகுந்த மின் பாதை இல்லை. தற்போது உள்ள மின் பாதை பழமையானதாகவும், பழுதடைந்தும் காணப்படுகிறது. இதனால் நவீன முறைகளை பயன்படுத்தி தென் மாநிலங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு மட்டுமே வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம். மின் உற்பத்திக்கு தேவையான பணிகள் முடிந்துள்ள நிலையில், இந்த மாத இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கும்.
காங்கிரஸ் கட்சியினர் மீது குற்றச்சாட்டுகளை கூறி வரும் சுப்பிரமணியசாமி ஒரு விளம்பர பிரியர். அவரது குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். அதேபோல அன்னா ஹசாரே குழுவினர் ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
காமன்வெல்த் போட்டி நடைபெற்ற போது எழுந்த புகார் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறி வந்தால் மானநஷ்ட வழக்கு தொடருவோம்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் வரும் 2014ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பது தெளிவாக தெரிகிறது என்றார்.