இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
'உழைப்பே உயர்வு' என்ற முதுமொழிக்கேற்ப, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைபவர்கள் தொழிலாள பெருமக்கள் ஆவார்கள். தொழிலாளர்களின் உண்மையான முன்னேற்றமே நாட்டின் முழுமையான வளர்ச்சியாகும். உற்பத்தியை பெருக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்காற்றுகிறது. அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் அவர்களுக்கு உற்சாகத்தினை ஏற்படுத்தும் வகையிலும் 'போனஸ்' மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பெரும் நிதிச்சுமை உள்ள நிலையிலும், மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வரும் பண்டிகை நாட்களை மனநிறைவுடன் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அவர்களுக்கு 'போனஸ்' மற்றும் கருணைத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் 2011-12 ஆம் நிதி ஆண்டிற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தைச் சார்ந்த 74,950 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை, ஆக மொத்தம் 20 விழுக்காடும், மேலும் 9,350 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாய் கருணைத் தொகையும் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அக்கழகத்திற்கு 64 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும். இதன் மூலம் 84,300 தொழிலாளர் மற்றும் பணியாளர்கள் பயன் பெறுவர்.
அதேபோன்று 2011-12 ஆம் நிதி ஆண்டிற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த 1,27,102 தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை ஆக மொத்தம் 20 விழுக்காடும், மேலும் 11,452 பதிலிப் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 100 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் முலம் போக்குவரத்துத் கழகங்களைச் சார்ந்த மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 554 தொழிலாளர் மற்றும் பணியாளர்கள் பயன் பெறுவர்.
மேலும், தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத் தோட்டக்கழகத்தை சார்ந்த பணியாளர்களுக்கும் போனஸ் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை மற்றும் 10 விழுக்காடு கூடுதல் கருணைத் தொகை, ஆக மொத்தம் 20 விழுக்காடு வழங்கப்படும். இதனால் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்திற்கு 5 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 8,686 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன் பெறுவர்.
அதே போன்று, அரசு ரப்பர் கழகத்தைச் சார்ந்த பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும். இதனால் அரசு ரப்பர் கழகத்திற்கு 1 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் அரசு ரப்பர் கழகத்தைச் சார்ந்த 2,270 பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பயன் பெறுவர்.
மேலும், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தைச் சார்ந்த பணியாளர்களுக்கும் 20 விழுக்காடு போனஸ் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்திற்கு 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தை சார்ந்த 419 பணியாளர்கள் பயன் பெறுவர்.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை ஆக மொத்தம் 20 விழுக்காடு வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு 6 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 79 பணியாளர்கள் பயன் பெறுவர்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பணிபுரியும் ‘சி' மற்றும் ‘டி' பிரிவு பணியாளர்களுக்கும் 2011-12 ஆம் ஆண்டிற்கான 20 விழுக்காடு போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு 9 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 121 பணியாளர்கள் பயன் பெறுவர். மேலும், தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை மற்றும் 10 விழுக்காடு சிறப்பு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு ‘போனஸ்' வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதற்காக 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் இந்த சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 8,029 பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன் பெறுவர். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை மற்றும் 10 விழுக்காடு கூடுதல் கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதனால் அக்கழகத்திற்கு 22 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் அக்கழகத்தில் பணிபுரியும் 28,910 பணியாளர்கள் பயன்பெறுவர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகையும், நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை அல்லது குறைந்தபட்ச கருணைத்தொகை ரூ.2,000 இதில் எது அதிகமோ அந்த தொகையும், சுமைதூக்கும் தொழிலாளர்கள் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு அட்டை என்று வித்தியாசம் ஏதும் இல்லாமல் 1.4.2011 முதல் 31.3.2012 வரையிலான காலத்தில் 30 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றிய அட்டையில்லாத சுமைதூக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை, அல்லது குறைந்தபட்ச கருணைத்தொகை ரூ.1,500 இதில் எது அதிகமோ அந்த தொகையும், நாட் பணியாளர்கள் பிரிவு -1 (கிடங்குகளில் பணிபுரியும் பணியாளர்கள்) நாட் பணியாளர்களுக்கு (குறைந்த பட்ச கூலி அடிப்படையில் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்) 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகையும்,பிரிவு-2 1.4.2011 முதல் 31.3.2012 வரை 30 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றிய பணியாளர்களுக்கு, 1.4.2011 முதல் 31.3.2012 வரை 30 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றிய நாட் பணியாளர்கள் மற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு கருணைத்தொகை தலா 1500 ரூபாயும், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் பணிபுரியும் பருவகால சுமைதூக்கும் பணியாளர்களுக்கு கருணைத்தொகை 1,500 ரூபாயும் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதனால் அரசுக்கு 15 கோடியே 12 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் 41,271 பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைவார்கள். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸாக 8.33 விழுக்காடும், கருணைத் தொகையாக 11.67 விழுக்காடும் சேர்த்து மொத்தம் 20 விழுக்காடு போனஸ் தொகையாக வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் இணையம் மற்றும் ஒன்றியங்களுக்கு 4 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் இவ்விணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 6,074 பணியாளர்கள் பயன் அடைவர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரியும் ‘ஊ' மற்றும் ‘னு' பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு 50 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இதனால் 1,207 பணியாளர்கள் பயனடைவார்கள்.
மேலும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘ஊ' மற்றும் ‘னு' பிரிவுப் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அவ்வாரியத்திற்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் இவ்வாரியத்தில் பணிபுரியும் 3,089 பணியாளர்கள் பயன்பெறுவர். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இல்லாத சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கிடவும் மற்றும் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ், 1.67 விழுக்காடு கருணைத் தொகை மற்றும் 10 விழுக்காடு கூடுதல் கருணைத் தொகை வழங்கிடவும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு இணையங்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 1,500 ரூபாய் கருணைத் தொகையாகவும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 1,200 ரூபாய் கருணைத் தொகையாக வழங்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இதனால் 18 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் அச்சங்கங்களில் பணிபுரியும் 46,230 பணியாளர்கள் பயன்பெறுவர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘ஊ' மற்றும் ‘னு' பிரிவுப் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அவ்வாரியத்திற்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் இவ்வாரியத்தில் பணிபுரியும் 3,942 பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும் இந்த போனஸ் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
தொழிலாளர்களின் நலனில் என்றுமே மிகுந்த அக்கறைக் கொண்டு செயல்படும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் இந்த அறிவிப்பு, போக்குவரத்து, மின்சாரம், ஆவின், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் மேற்கூறிய வாரியங்கள் மற்றும் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகை நாட்களை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட வழிவகுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.