அரசு மணல் குவாரிகளில் இருந்து தேவைக்கு ஏற்ப மணலை சப்ளை செய்ய முடியவில்லை. மணல் விலை கிடு கிடு வென உயர்ந்து ஒரு லாரி மணல் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கன அடி மணல் ரூ.65 அளவுக்கு விலை உயர்ந்தது. சாதாரணமாக ஒரு லாரியில் 400 முதல் 450 கன அடி அளவு மணல் ஏற்றுவார்கள். மணல் விலை இந்த அளவுக்கு விலை உயர்ந்ததால் பில்டர்களும், வீடு கட்டி வருவோரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விலை அதிகம் ஒருபுறம் என்றாலும் பணம் கொடுத்தாலும் போதிய அளவுக்கு மணலும் கிடைப்பதில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் பாதிப்புக்கு உள்ளாகின.
இந்த நிலையில், மணல் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் கட்டுமான நிறுவனங்கள் கம்போடியா நாட்டில் இருந்து கப்பல் மூலமாக மணலை இறக்குமதி செய்து வருகின்றனர். சென்னையில் மணல் விலை ஒரு கன அடி ரூ.65. கம்போடியாவில் இதே அளவு மணலின் விலை ரூ.12. ஆனால், அங்கிருந்து கப்பல் மூலம் கொண்டுவரும் போக்குவரத்து செலவு, பல்வேறு வரிகள் ஆகியவற்றை கணக்கிட்டால் கணிசமான செலவு வந்துவிடும். இருந்த போதும் மணல் தட்டுப்பாடின்றி கிடைப்பதால், வேறுவழியில்லாமல் கம்போடியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு கட்டுமான நிறுவனத்தினர் ஆளாகியுள்ளனர்.