டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான இன்றைய ஏலத்தில் விறுவிறுப்பு இல்லை. டெல்லி மற்றும் மும்பை பகுதிகளுக்கான உரிமங்களைப் பெற எந்த நிறுவனமும் முன்வரவே இல்லை.
உச்ச நீதிமன்றத்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட 122 தொலைத் தொடர்பு உரிமங்களுக்கான ஏல விற்பனை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இன்றைய ஏலத்தில் பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்லுலார், டெலிநார் மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் பங்கேற்றன.
யுனிநார் நிறுவனத்தின் 22 லைசென்ஸ்களும், லூப் டெலிகாம் 21, சிஸ்டமா ஷியாமா 21, ஐடியா செல்லுலார் மற்றும் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் 13, விடியோகான் 21, எடிசாலட் டிபி 15, எஸ்-டெல்6, டாடா டெலிசர்வீசஸ் 3 ஆகியவை ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ்கள். ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டாரத்திலும் 11 அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ஏலம் நடைபெற்றது,
ஆனால் இனறைய ஏலத்தில் சில முக்கியமான பகுதிகளுக்கான உரிமங்களைப் பெற நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. முதல் 2 சுற்றில் டெல்லி, மும்பை பகுதிகளுக்கான உரிமத்தை பெறுவதில் எந்த நிறுவனமுமே முன்வரவும் இல்லை.
5 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கு குறைந்தபட்ச தொகையாக ரூ. 14,000 கோடியை அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இது முன்னர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 7 மடங்கு அதிகமாகும். 2001ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலத்தில் ரூ. 1,658 கோடிதான் குறைந்தபட்ச தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.