போலி கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து அதன் மூலம் அப்பாவி மக்களின் பணத்தை திருடும் கும்பலின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டு போகிறது. தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும் கிரெடிட் கார்டுகளைத் திருடி, அதில் உள்ள ரகசிய குறியீட்டு எண்களை வைத்து போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்த கும்பல் மற்றும் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி செய்த கும்பல் ஆகிய 2 கும்பல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் சிக்கின. இருப்பினும் கிரெடிட் கார்டு மோசடி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு மோசடியில் இருந்து தப்பிக்கத் தேவையான சில அறிவுரைகளை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
* பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது. வங்கி வாடிக்கையாளர் மையத்தில் இருந்து பேசுகிறோம் என்று யாராவது போனில் அழைத்தால் உஷாராக இருக்க வேண்டும்.
* டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.
* ஏ.டி.எம். மையத்தில் சென்று பணம் எடுக்கும் போது ஏ.டி.எம். எந்திரத்தில் வேறு ஏதும் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
* தங்களுடைய செல்போன் எண்களை வங்கியில் கொடுத்து, பண பரிமாற்றங்களை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை பொதுமக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
* தேவையில்லாமல், சர்வதேச கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை அதிகம் வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாது.
* ஜவுளிக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டுகளை கொடுக்கும்போது ஒருமுறைதான் தேய்க்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.
* நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் தங்களது கார்டுகளை கொடுக்கக் கூடாது.
* போலி கார்டு மூலமாக பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடியாக தங்களது கார்டின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.