திருப்பூர்: திருப்பூரில், தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் புதன்கிழமை( நவம்பர் 28) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள, லட்சம் பேர் பங்கேற்கும் பேரணிக்கு, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூரில் தினமும், 18 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. இதனால் பின்னலாடை தொழில் மட்டுமல்லாது உபதொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரமின்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னையை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில், வரும், 28ம் தேதி, லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்த, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
போலீஸ் அனுமதி மறுப்பு
தொழில் பாதுகாப்பு குழுவினர் மற்றம் தொழில் கூட்டமைப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்.பி., அமித் குமார் சிங், மின்வெட்டு பிரச்னையால் திருப்பூர் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார். கார்த்திகை தீப திருவிழாவும் வருவதால், ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவர் என்பதால் உணர்வுகளை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ளுங்கள் என்றார்.
உணர்வுகளை வெளிப்படுத்தும் பேரணி
இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; பிரச்னையை அரசுக்கு உணர்த்தவே போராட்டம்; திருப்பூருக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதே கோரிக்கை, என்று தொழில் பாதுகாப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஊரை காலி செய்யும் நிலை
ஏற்கனவே சாயப்பட்டரை பிரச்சினையால் திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்தது. ஏராளமான சிறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் மின்வெட்டுப் பிரச்சினையால் 3 ஷிப்ட் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு ஷிப்ட் வேலையை கூட சரியாக செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் திருப்பூரை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மின்வெட்டுப் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழில் பாதுகாப்புக்குழுவினரின் கோரிக்கையாகும்.