சென்னை: ரயிலில் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு செய்யும் பயணிகள் நாளை முதல் பயணத்தின்போது ஒரிஜினல் புகைப்பட அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். இந்த புதியநடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
அடையாள அட்டை இல்லாமல் போனால் பயணக் கட்டணத்தைப் போல 2 மடங்கு அபராதம் செலுத்த வேண்டும்.
ரயில்களில் தற்போது உயர் வகுப்பு முன்பதிவுக்கு மட்டும் பயணத்தின்போது பயணிகள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்த நிலையி்ல் நாளை முதல் அனைத்து வகுப்பு முன்பதிவுகளுக்கும் அடையாள அட்டை கட்டாயமாகிறது.
2-ஆம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில் இடைத்தரகர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது ரயில்வே துறைக்கு தெரிய வந்தது. பொத்தம் பொதுவாக பெயர், வயதுகளை குறிப்பிட்டு டிக்கெட் பெற்று அவற்றை அதிக விலைக்கு விற்று வருவாய் ஈட்டுவதை சிலர் தொழிலாக செய்து வருகின்றனர்.
சில ஏஜென்சிகளும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் இதை ஒழிப்பதற்காகவே தற்போது அனைத்து முன்பதிவு பயணிகளும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஏ.சி உயர் வகுப்பு பயணிகள், முதல் வகுப்பு பயணிகள், 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை முன்பதிவு பயணிகள் அனைவரும் பயணத்தின் போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதில் ஏதாவது ஒன்று கட்டாயம் தேவை
புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டையை பயணிகள் கொண்டு போக வேண்டும். எந்தெந்த அட்டையைக் காட்டலாம் என்ற ஒரு பட்டியலையும் ரயில்வே அறிவித்துள்ளது. அவை ...
ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, மத்திய மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டை, மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டை போன்றவற்றை காட்டலாம்.
ஒரே டிக்கெட்டில் சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்டோர் போவார்கள். அப்படிப்பட்ட நிலையில் அதில் யாராவது ஒருவரின் அட்டையைக் காட்டினால் போதும்.
டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை சரி பார்க்க வரும்போது, புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை ஏதாவது ஒன்றை அவரிடம் காண்பிக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்காவிட்டால் அதனை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதி அபராதம் விதிக்கப்படும். ஜெராக்ஸ் காப்பியெல்லாம் எடுத்து வரக் கூடாது.