சென்னை: சென்னை திரைப்பட விழா என்ற பெயரில் சரத்குமாரை பின்னணியில் கொண்டு இயங்கும் தனியார் நிகழ்வுக்காக ரூ 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இத்தனை இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் பார்க்க இலவசமாக நடத்தப்படுவதில்லை. பெரிய தொகையை கட்டணமாகப் பெற்றுக் கொண்டு பார்க்க அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் முதல்வர் வழங்கினார்.
இந்த காசோலை வசூல் நிகழ்வில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான ஆர். சரத்குமார், எம்.எல்.ஏ., திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்னம், விழாவை நடத்தும் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இருமடங்கு நிதியுதவி வழங்கியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, கருணாநிதி முதல்வராக இருந்த போது, எஸ்வி சேகருடன் போய் ரூ 25 லட்சத்தை இந்த தங்கராஜ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிதி எதற்காக செலவழிக்கப்படுகிறது... அதன் பலன் என்ன என்பதெல்லாம்... மூச்!
ஆத்துல போற தண்ணி.. அய்யா குடி அம்மா குடி என்றொரு பழமொழி உண்டு. அதை நிரூபிக்கிறார்கள்!