சென்னை: பயோ மெட்ரிக் கார்டு தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரேஷன் கார்டுகளில் மேலும் 6 மாத காலத்திற்கு உள்தாள் இணைத்து பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டை தாரர்கள் ரேஷன் பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க தற்போது உள்ள குடும்ப அட்டையை நவீனப்படுத்தி பயோமெட்ரிக் கார்டு வழங்க அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த கார்டை ரேஷன் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர் கடைக்கு கொண்டு சென்று மெஷினில் சொருகினால்தான் பொருட்களை வாங்க முடியும்.
பயோ மெட்ரிக் கார்டு தயாரிக்கும் பணி தாமததால் ரேஷன் கார்டுகள் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது. 2011-ல் முடிந்த குடும்ப அட்டை ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டு 2012 வரை நடைமுறையில் உள்ளது. இந்த மாதத்துடன் தற்போதுள்ள கார்டுகளின் காலம் முடிகிறது.
இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் புதிய கார்டு வழங்க வாய்ப்பு இல்லை. அதனால் குடும்ப அட்டையில் புதிதாக உள்தாள் இணைத்து மேலும் 6 மாதத்திற்கு தற்போது உள்ள ரேஷன் கார்டுகளை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
2-வது முறையாக உள்தாள் இணைப்பதற்கான உத்தரவு வாய்மொழியாக துறை அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு சில நாட்களில் குடும்ப அட்டையில் புதிதாக உள்தாள் இணைக்கும் பணி தொடங்கும்.
மேலும் பொங்கலுக்கு இலவச வேட்டி-சேலை வழக்கமாக வழங்கப்படும். அதற்கு குடும்ப அட்டை முக்கியமாக கருதப்படுகிறது. அதனால் பயனாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ரேஷன் கார்டுகளில் விரைவாக உள்தாள்களை இணைக்க வேண்டும் என்று உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படாத வகையில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் உள்தாள்களை இணைத்து பொருட்கள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.