டெல்லி: பணியாளர்களின் சம்பளத்துடன், அவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளுக்கான ஊதியத்தையும் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து பி.எப். தொகையில் பிடித்தம் செய்வதற்கான புதிய சுற்றறிக்கையை ஈபிஎப் நிறுவனம் அனுப்பி உள்ளது.
தொழிலாளர்கள் வைப்பு நிதி நிறுவனம், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள தங்களது கிளை அலுவலகங்களுக்கு புதிய சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தொழிலாளர்கள் தங்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பள தொகையில் பி.எப். பிடித்தம் அதிகமாக போகாத அளவுக்கு, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் மொத்த தொகையில், ஏறக்குறைய சரிபாதியை வீட்டு வாடகை, குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், போக்குவரத்து படிகள் போன்ற இதர சலுகைகளாக காண்பித்து நிறுவனங்கள் வழங்குவதாகவும், இதனால் பி.எப்.-க்காக பிடித்தம் செய்யப்படும் சதவீதம் குறைவதாக குறிப்பிட்டுள்ளது.
எனவே இனிமேல் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் வழங்கப்படும் இதர சலுகைகளுக்கான தொகையையும் சேர்த்து பி.எப். பிடித்தத்தில் சேர்க்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால்,இதர சலுகைகளுடன் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு குறையும்.அதாவது தற்போது பிடித்தம் செய்யப்படும் பி.எப். தொகையின் அளவு,ஏறக்குறைய இன்னொரு மடங்கு அதிகரிக்கும்.
அனைத்து சம்பளத்தையும் செலவழித்துவிடும் தொழிலாளர்களுக்கு, இது ஒரு கட்டாய சேமிப்பாக இருப்பதால், அவர்களது வருங்காலத்திற்கு நிச்சயம் உதவுவதாகத்தான் இருக்கும் என்று தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுநாள் வரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தின் அடிப்படை சம்பளம் மற்றும் கருணை தொகையில் 12 சதவீதத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக பிடித்தம் செய்து,அத்தொழிலாளர்கள் வேலையை விட்டு செல்லும்போதோ அல்லது ஓய்வு பெறும்போதோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்தும் அதே பங்களிப்பு தொகையையும் சேர்த்து, வட்டியுடன் வழங்கப்பட்டு வந்தது.
இந்த புதிய முறை மூலம் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் பி.எப்,. தொகைக்கு சமமாக நிறுவனங்களும் செலுத்த வேண்டும் என்பதால், தொழிலாளர்களின் பி.எப். சேமிப்பு கணக்கு தொகை மேலும் அதிகரிக்கும். இது தொழிலாளர்களுக்கு தொலைநோக்கு அடிப்படையில் நன்மை தரக்கூடியதுதான் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.