டெல்லி: ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தைப் போவதாக ரயில்வே துறை இணை அமைச்சர் சூரியப்பிரகாஷ் ரெட்டி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரயில் பயணிகள் கட்டணம் கிலோ மீட்டருக்கு 5 முதல் 10 காசுகள் உயர்த்தப்படும். ரயில்வே துறையின் நிதி நிலைமை சரியில்லை. போதுமான நிதி திரட்டாவிட்டால் ரயில்வே துறை முடங்கும். பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் கிலோ மீட்டருக்கு 5 முதல் 10 காசு வரை உயர்த்தப்படும் என்றார்.
ரயில்வே துறையின் மற்றொரு இணை அமைச்சரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் ரயில் கட்டண உயர்வு அவசியமானது என்று கூறியுள்ளார்.
ரயில்வே துறையில் பயணிகள் பிரிவில் மட்டும் நடப்பாண்டில் ரூ.22 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. கிலோ மீட்டருக்கு 10 காசு வரை பயணிகள் கட்டணத்தை உயர்த்தினால் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் திரட்ட முடியும் என்பது எதிர்பார்ப்பு.
இருப்பினும் இந்த உயர்வு ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறுமா? அல்லது அதற்கு முன்பே நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது விரைவில் தெரியவரும் என்கிறது ரயில்வே வட்டாரங்கள்.