டெல்லி: பயனாளிகளுக்கு நேரடியான மானியத் தொகையை பணமாகக் கொடுக்கும் திட்டம் இன்று முதல் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் 20 மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது.
பல்வேறு பொருட்களுக்கான மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்திவிட மத்திய அரசு திட்டமிட்டது. ‘ஆதார்‘ அட்டை திட்டத்துடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இத்தொகையை செலுத்தி அதை ஏ.டி.எம். மூலம் பயனாளிகள் பெற வழி வகுத்துள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வருகிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள பயனாளிகள், ஆதார் அட்டையுடன் இணைந்த வங்கி கணக்கில் அந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம். மொத்தம் 26 நலத்திட்டங்களுக்கான நிதிஉதவி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இருப்பினும், முதல்கட்டமாக, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி சகாயதா யோஜனா, தனலட்சுமி திட்டம், எஸ்.சி., எஸ்.டி. வேலைவாய்ப்பு உதவித்தொகை உள்பட 7 திட்டங்களுக்கான நிதிஉதவியை இத்திட்டத்தின் கீழ் பெறலாம்.
அடுத்தகட்டமாக, பிப்ரவரி 1-ந் தேதி முதல், மேலும் 11 மாவட்டங்களிலும், மார்ச் 1-ந் தேதி முதல், மேலும் 12 மாவட்டங்களிலும் என மார்ச் மாதத்துக்குள் மொத்தம் 43 மாவட்டங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்து விடும். இந்த திட்டத்தின் கீழ், டீசல், மண்எண்ணெய், உணவு பொருட்கள் மற்றும் உரத்துக்கான மானிய தொகையை வழங்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. இவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்படும்.
புதுவையில் ஏன்?
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் புதுச்சேரியை நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சேர்த்திருப்பதற்கு பரபரப்பான காரணமும் சொல்லப்படுகிறது. அவரது சொந்தத் தொகுதியான தமிழகத்தின் சொந்தத் தொகுதியில் கடந்த தேர்தலில் தோல்வியே அடைந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் கடைசி நேர குளறுபடியில்தான் அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்லப்படுகிற ப.சிதம்பரமும் எளிதில் வெற்றி பெறக் கூடிய வகையில் புதுச்சேரி தொகுதியைத் தேர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.