சென்னை: கிருஷ்ணா நதிநீரைத் தேக்க ரூ35 கோடி செலவில் தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட ரூ98.60 கோடி செலவிலான நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து மாரநாடு ஏரி மற்றும் 9 ஏரிகளுக்கு நீர் வழங்க, 12 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் இலாடனேந்தல் கிராமத்தில் ஒரு படுகை அணை கட்டுதல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து பார்த்திபனூர் பெரிய மற்றும் சிறிய ஏரி, வன்னிக்குடி ஏரி மற்றும் இரண்டு ஏரிகளுக்கு நீர் வழங்குவதற்காக ஆத்தூர் கிராமத்தில் 16 கோடி ரூபாய் செலவில் படுகை அணை கட்டுதல்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், எலமனூர் கிராமத்தில் மேலணையின் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு நீரை திருப்பி விடுவதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மேலணையின் கதவுகளை, 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சீராக்குதல்
சென்னை நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை சேமிக்க, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், திருக்கண்டலம் கிராமத்தின் அருகே கொரட்டலையாற்றின் குறுக்கே 35 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டுதல்
அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டத்தில் உள்ள மருதையாற்றின் குறுக்கே அம்பலவார்கட்டளையிலிருந்து சுண்டக்குடி சாலை வரை கி.மீ. 3/2-ல் 10 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுதல்,
தூத்துக்குடி மாவட்டத்தில் பேய்குளம், பொட்டைகுளம் மற்றும் கோரம்பள்ளம் ஆகிய ஏரிகளை, 20 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்துதல்,
வடசென்னை, எண்ணூர் அதிவிரைவு சாலையின் அருகே சின்னக்குப்பத்தில் பழுதடைந்துள்ள கடலரிப்பு தடுப்புச் சுவர்களை 25 லட்சத்து 60 ஆயிரம் செலவில் சீரமைத்தல் என மொத்தம் 98 கோடியே 67 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.