சில்லறை வர்த்தகத்தில் ஜாம்பவானாக இருக்கும் வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழையத் தேவையான நடவடிக்கைகளை கடந்த 2008ம் ஆண்டு முதலே எடுத்துள்ளது. அதற்காக 2008ம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்காவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ரூ.180 கோடி செலவு செய்துள்ளது. இவர்கள் அமெரிக்க அரசு மூலம் இந்திய அரசை நெருக்கி சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் உதவியை நாடலாம். மேலும் இது தொடர்பாக அவர்களுக்கு செலவும் செய்யலாம். ஆனால் அந்த செலவு கணக்கை ஒவ்வொரு காலாண்டிலும் அரசிடம் சமர்பிக்க வேண்டும்.
அப்படி வால்மார்ட் அறிக்கை தாக்கல் செய்தபோது தான் அது இந்தியாவுக்குள் நுழைய வர்த்தக ஆதரவு திரட்ட செலவு செய்த தொகை தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களை அடக்கிய காலாண்டில் மட்டும் வர்த்தக ஆதரவு திரட்ட ரூ.8 கோடி செலவு செய்துள்ளது வால்மார்ட்.
மேலும் கடந்த ஆண்டில் மட்டும் அது ஆதரவு திரட்ட ரூ.33 கோடி செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.