சென்னை: டெல்லியில் நடந்த இந்தியா டுடே விருதுகள் விழாவின்போது சென்னை, மதுரை, கோவை நகரங்களுக்கான விருதுகளை வாங்கி வந்த அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தியா டுடே குழுமத்தின் சார்பில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில், 10 ஆண்டுகளில் மிக முன்னேறிய மாநிலம் என்ற வரிசையில் தமிழ்நாட்டிற்கு 2-வது இடம் கிடைத்து இருப்பதாகவும், பெரிய மாநிலங்களில் வேளாண்மைத் துறையில் தமிழ்நாட்டிற்கு முதல் இடம் கிடைத்து இருப்பதாகவும் தெரிவித்து அதற்கான விருதுகளை முதல்வர் ஜெயலலிதாவிடம் கடந்த மாதம் 18-ந் தேதி தலைமைச் செயலகத்தில், இந்தியா டுடே குழுமத்தின் மேலாண்மை ஆசிரியர் ராஜிவ் வழங்கினார்.
அப்போது, இந்தியா டுடே குழுமத்தின் சிறந்த நகரத்திற்கான விருது வழங்கும் விழா கடந்த மாதம் 22-ந் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளதாகவும், கல்வி மற்றும் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த நகரமாக சென்னையும், கல்வி மற்றும் சுற்றுச்சூழலில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக மதுரையும், முதலீட்டை ஈர்ப்பதில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக கோயம்புத்தூரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, இந்தப் பரிசுகளை நேரில் பெற்றுச் செல்ல அமைச்சர்களை அனுப்பி வைக்குமாறு இந்தியா டுடே குழுமத்தின் மேலாண்மை ஆசிரியர் முதல்வரிடம் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்று, சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அனுப்பி வைப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அதன்படி, டெல்லியில் நடைபெற்ற இந்தியா டுடே குழுமத்தின் சிறந்த நகரத்திற்கான விருது வழங்கும் விழாவில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு கல்வி மற்றும் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த நகரமாக சென்னையும், கல்வி மற்றும் சுற்றுச்சூழலில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக மதுரையும், முதலீட்டை ஈர்ப்பதில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக கோயம்புத்தூரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக வழங்கப்பட்ட விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் அவர்கள் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.