அதற்காக மூன்று விதமான உத்திகளை கையாளப் போகிறதாம் சீனாவின் புதிய தலைவரான சீ சின்பிங் அரசு.
முதல் கட்டமாக இந்த அபரிமிதமான அந்நிய செலாவணியைப் பயன்படுத்தி, சீனாவுக்கு தேவையான பைட்டர் ஜெட் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவிடமிருந்து வாங்கப் போகிறதாம்.
அடுத்து 10 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் லீ கெச்சியாங் அறிவித்துள்ளார். ஆனால் இதற்காக அந்நிய செலாவணியிலிருந்து ஒரு டாலரைக் கூட தொடப் போவதில்லையாம். பரஸ்பர அட்ஜெஸ்ட்மெண்டில் இந்த இறக்குமதி நடக்குமாம். இதன் மூலம் வாங்கும் திறன் அதிகரிக்கும், கூடவே அந்நிய நாடுகளின் பொருளாதாரத்தில் சீனாவின் செல்வாக்கும் ஓங்கும்.
அடுத்து சீனாவின் பிரமாண்ட எண்ணெய் நிறுவனம் 3 பில்லியன் டாலர் ஒப்பந்தங்கள் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் போடப்போகிறது. இதன் மூலம் ஆற்றல் உற்பத்திக்கான தளவாடங்கள் போதுமான அளவுக்கு சீனாவில் குவியும் நிலை ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம் உலக அளவில் பல நாடுகளில் சீனப் பணம் செல்வாக்கு செலுத்தும். சீனாவை நம்பி இயங்கும் சூழல் உருவாகும். அதைத்தான் சீனா விரும்புகிறது.
முந்தைய அதிபர் ஹூ ஜிந்தாவ் கடந்த பத்தாண்டுகளில் செய்யாததை, ரஷ்யாவுடனான புதிய ஆயுத ஒப்பந்தம் மூலம் சாதித்திருக்கிறார் சீ சின்பிங்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான தனது சந்திப்பின் போது, 24 சூ-35 ரக பைட்டர் விமானங்களையும், நான்கு லாடா வகை நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் சீ. உலகிலேயே அதிநவீன, அதி சக்தி வாய்ந்த போர் விமானங்கள் ரஷ்யா தயாரிக்கும் இந்த சூ 35.
இந்த ஒப்பந்தத்தால் இந்தியா போன்ற அண்டை நாடுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது ராணுவத்தின் சமநிலையை பராமரிக்க செய்யப்படும் இயல்பான, வழக்கமான ஒப்பந்தமே என்றும் சீனா தெரிவித்துள்ளது.
சீன மக்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்கவும் சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக தனது சந்தையில் மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கப் போகிறதாம்.