மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது 72 சதவீத அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இந்த அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதாவது கூடுதலாக 8 சதவீதம் உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கவிருக்கிறது என்று தெரிகிறது.
இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் 1-1-2013 முதல் இந்த புதிய அகவிலைப்படி பொருந்தும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அகவிலைப்படியை உயர்த்தி 72 சதவீதம் ஆக்கியது. இந்நிலையில் மீண்டும் அகவிலைப்படி உயரவிருக்கிறது. அகவிலைப்படி உயர்ந்தால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவர்.
இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.கே.என்.குட்டி கூறுகையில்,
அகவிலைப்படி உயர்த்தப்படுவது நல்லது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். விரைவில் ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும் என்றார்.