காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் பிடித்த 10 டன் கத்தாலை மீன்கள் ஒரு கோடி ரூபாக்கு ஏலம் போனது.
காரைக்கால் மாவட்டம் காசாகுடியைச் சேர்ந்த மீனவர்கள் செல்வமணி, கோவிந்தசாமி, கிளிஞ்சல் மேட்டைச் சேர்ந்த ஆனந்தராஜ், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த வாசுதேவராஜ் ஆகியோர், கடந்த 2ம்தேதி மீன் பிடிக்க சென்றுவிட்டு நேற்று கரை திரும்பினர். அவர்களுக்கு அரிய வகை மீன்களான கூறை கத்தாலை மீன்கள் 10 டன் கிடைத்தது.
ஒவ்வொரு மீன்களும் 2 அடி முதல் 3 அடிநீளம், 10 கிலோ முதல் 20 கிலோ எடையும் இருந்தது. ஒரு கிலோ ரூ 900 முதல் ரூ 1,200க்கு விலை போனது. மொத்தம் 10 டன் மீன்களையும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தார்.
இந்த கத்தாலை வகை மீன்கள், ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்தவையாகும். இந்த வகை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற காற்றுப்பை உதவியுடன் கூடுதல் சுவாசத்தை கொண்டிருக்கும். இந்த நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாகும்.
மேலும் இந்த நெட்டியானது ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒருவகை வேதிப்பொருட்களை கொண்டதாகவும் ஒயின் மற்றும் ஜெல்லி மிட்டாய்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக இதை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அதனால், மீனவர்கள் இதனை சேமித்து தங்கத்தை போல் கிராம் கணக்கில் விற்பனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இவ்வகை மீன்கள் ஆழ்கடலில் 4 அல்லது 6 நாட்கள் தங்கி மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தால் மட்டுமே கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.