சென்னை: நம் நாட்டுப் பங்குச் சந்தைகளில் அதிகளவில் முதலீடு செய்யும் மிகப் பெரிய நிறுவனங்களில் எல்.ஐ.சி நிறுவனமும் ஒன்று. நடப்பு நிதியாண்டின் கால் இறுதியில் (2013), குறிப்பிட்ட நிறுவனங்களில் உள்ள தம் பங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினாலும் எல் ஐ சி, அப்பங்குகளை குறைத்துக் கொண்டது.
அப்படி எல்.ஐ.சி நிறுவனம் தவிர்த்த பங்குகள் எவை? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனம் 2013ம் நிதியாண்டின் மூன்றாம் காலிறுதியில் மிகவும் சிறப்பான, பிரம்மிக்கத்தக்க வகையில் செயல்பட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை கவர்ந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 3,000 த்தைத் தாண்டியது. இருப்பினும் இதே காலகட்டத்தில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள இன்போசிஸ் பங்குகளை விற்றுள்ளது எல்.ஐ.சி நிறுவனம்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
வங்கிப் பங்குகளில் பலருக்கு பிடித்தமான ஹெச்.டி.எஃப்.சி பங்குகள், கோப்ராபோஸ்ட் வெளியிட்ட பண மோசடி தொடர்பான புகார்கள் முதலீட்டாளர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் தம்மிடம் உள்ள ஹெச்.டி.எஃப்.சி பங்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக, சுமார் 40 லட்சம் பங்குகளை விற்றுள்ளது எல்.ஐ.சி நிறுவனம்.
ஹிந்துஸ்தான் யூனிலிவர்
மார்ச் 31ல் முடிந்த காலிறுதியில் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனப் பங்கின் விலை சரியத் தொடங்கியது. மேலும், ஹிந்துஸ்தான் யூனிலிவரின், மூல நிறுவனத்துக்கு கொடுக்கும் ராயல்டி தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, சுமார் 1 கோடியே 30 லட்சம் பங்குகளை விற்றுள்ளது எல்.ஐ.சி. நிறுவனம்.
பேங்க் ஆப் பரோடா
வங்கிகள் தமக்கு வருமானம் தராத பல சொத்துக்களை வைத்திருக்கின்றன என்பது இப்போது பலரும் முன்வைக்கும் ஒரு விவாதம். இந்த நிலையில், தம்மிடம் உள்ள ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பேங்க் ஆப் பரோடா பங்குகளை விற்றிருக்கிறது எல்.ஐ.சி. நிறுவனம்.