இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் கடந்த காலண்டு நிதி அறிக்கை பெருமளவில் சரிந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் சேர்மனாக மீண்டும் பொறுப்பேற்றார். அதனால் இந்த இன்போசிஸ் பங்குகளில் இந்த திடீர் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்கனவே சேர்மனாக இருந்த நாராயண மூர்த்தி கடந்த 2011ல் பதவி விலகி, இன்போசிஸ் நிறுவன போர்டின் சிறப்பு உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் அவரை மீண்டும் சேர்மனாகவும் மற்றும் உதவி இயக்குநராகவும் நியமித்திருக்கிறது. அவருடைய பணி ஜூன் 1, 2013 முதல் தொடங்குகிறது. இதை பிஎஸ்இக்கு அளித்த செய்திக் குறிப்பில் இன்போசிஸ் தெரிவித்திருக்கிறது.
அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் சேர்மனாக மூர்த்தி இருப்பார். அவருடைய வரும் 5 வருட காலத்தில் ஆண்டுக்கு ரூ.1 மட்டுமே ஊதியமாக பெறுவார் என்று இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே சேர்மனாக இருந்த கேவி கமாத், ஜூன் 1 முதல் இன்டிபென்டென்ட் டைரக்டராக செயல்படுவார் என்று இன்போசிஸ் தெரிவித்திருக்கிறது.
புதிய சேர்மனான மூர்த்தியின் குழுவில் அவருடைய மகன் டாக்டர் ரோஹன் மூர்த்தி எக்ஸக்யூட்டிவ் அசிஸ்டண்டாக இருப்பார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த புதிய முடிவைப் பற்றி பழைய சேர்மன் கமாத் தெரிவிக்கும் போது, ஐடி தொழில் துறையில் இருக்கும் சவால்களை திறம்பட மேற்கொள்ளவும் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகமாகப் பெறவும் இந்த புதிய முடிவை இன்போசிஸ் எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.