
தொழில்துறை மதிப்பீடுகளின்படி, ஜெர்மனியின் தகவல் தொழில்நுட்பச் சந்தையின் மதிப்பு சுமார் 80 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,ஜெர்மனியில், அடுத்த மூன்று ஆண்டுகளில், சுமார் 1000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த விப்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஜெர்மனியில் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும்.
பெங்களூரைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விப்ரோ நிறுவனத்தின், ஜெர்மனி நாட்டு கிளையில் 500 ஊழியர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள். அங்கு 30க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 31,2013 இன் படி, 98 நாடுகளில், சுமார் 1,45,000 ஊழியர்கள், விப்ரோ நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
வாகன உற்பத்தி நிறுவனம், ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனம் போன்றவை தங்களுடைய வாடிக்கையாளர்களில் சிலர் என்றும் சில்லரை வணிகம், வாகன உற்பத்தி, தொலைத்தொடர்பு, வங்கி, பயன்பாடுகள் மற்றும் எரிசக்தி துறைகளின் மூலம் வருமானம் அதிகரிக்கும் என கூறியுள்ளது.
மிக சிறியதாகவும் இல்லாமல், பெரிதாகவும் இல்லாமல், அளவாக இருக்கும் நிறுவனங்களின் தேவை இங்கு அதிகமாக இருக்கிறது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்தத் தேவையை விப்ரோ நிறுவனம் விரைவில் பூர்த்தி செய்யும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெர்மனியைப் பொறுத்தவரை மூன்று அம்ச திட்டத்தை அமைத்து அதைச் செயல்படுத்தி வருகிறோம். நல்ல துறை சார்ந்த அறிவை வளர்ப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது, அங்கே உள்ள திறமையானவர்களைப் பணியில் அமர்த்துவது, மேலாண்மைத் திறன்களை மேம்படுத்துவது போன்ற திட்டத்தை வகுத்து செயல்பத்திக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு, ஜெர்மனியில் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து, விப்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications