சமீபத்தில் பாரீஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் ட்ரேட் கமிசனர் கார்ல் டி குச்த்தோடு நடைபெற்ற சந்திப்பில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆன்ந்த் சர்மா, மது வகைகளை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைப்பதாக உறுதி அளித்திருக்கிறார். அதன் விளைவாக இப்போது மது வகைகளை இறக்குமதி செய்வதற்கான வரி கடந்த காலங்களைவிட 80 சதவீதம் அளவிற்கு குறைந்திருக்கிறது.
மேலும் ஒரு பாட்டில் ஒயினுக்கு 3.7 அமெரிக்க டாலர், மற்றும் ஒரு பாட்டில் விஸ்கிக்கு 5.5 அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயம் செய்ய இந்தியா பரிந்துரை செய்திருக்கிறது.
எனினும், இறக்குமதி வரியை 40 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை குறைக்குமாறு இந்தியாவை ஐரோப்பிய யூனியன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் ஒரு பாட்டில் ஒயின் அல்லது விஸ்கிக்கு 3.5 அமெரிக்க டாலரை விலை நிர்ணயம் செய்ய இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் இந்திய வர்த்தகத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது "மது வகைகளை இறக்குமதி செய்வதற்கான வரிக்குறைப்பை நாங்கள் சரியான நேரத்தில் செய்திருக்கிறோம். ஒப்பந்தம் தொடர வேண்டுமா அல்லது உடைய வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் இது. இதற்கு மேல் வரிக்குறைப்பு செய்ய முடியாது என்று ஐரோப்பிய யூனியனிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து விட்டோம். அதோடு நாங்கள் டிஇஆர்சியின் (ட்ரேட் அன்ட் இகனாமிக் ரிலேசன்ஸ் கமிட்டி) விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர சர்மாவும், குட்சித்தும் மீண்டும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான தேதி இன்னும் குறிக்கப்படவில்லை. எனினும் இந்த சந்திப்பு அடுத்த மாத தொடக்கத்தில் பிரேசிலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உள்பட 27 நாடுகள் கடந்த 2007 முதல் இறக்குமதி வரியை 90 சதவீதம் அளவிற்கு குறைப்பது சம்பந்தமாக எஃப்டிஎவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.