இது குறித்து, ஏற்றுமதியாளர்களின் சர்வதேச பொருளாதாரக் குழுமத் துணைத் தலைவர் லிண்டா டெம்ப்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"அமெரிக்க ஏற்றுமதி மற்றும் விற்பனைக்கு எதிராக, இந்தியா பாரபட்சமாக நடந்து கொள்கிறது. இது குறித்து, இந்திய அரசின் உயர்மட்ட அளவில் நம் கவலையைத் தெரிவித்து, விரைவில் நல்ல முடிவுகளை எடுக்கு வற்புறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் நியாயமான வர்த்தக கூட்டமைப்பு எனும் அமைப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய டெம்ப்சே.
அடுத்த வாரம் இந்தியா செல்லும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜான் கெர்ரி, இது தொடர்பாக முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தக் கூட்டமைப்பில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குழுமம், அமெரிக்க அறிவுசார் சொத்து வர்த்தக குழுமங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில், நியாயமான முறையில், அனைவருக்கும் வர்த்தகம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்தியாவின் தவறான வர்த்தக முறைகளை கைவிட வேண்டும். மேலும் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
எங்களின் கோரிக்கைகளை இந்திய அரசு பரிசீலனை செய்து ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை, எங்கள் தொழில் கூட்டமைப்புக்கு உள்ளது என டெம்ப்சே தெரிவித்துள்ளார்.ஆனால், இந்த சர்வதேசப் பொறுப்பை இந்தியா கடைபிடிக்கவில்லை என்றால், வர்த்தகம் மற்றும் தூதரக வழிகளில் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது. இந்தியாவுடனான நல்ல தொழில் நல்லுறவுக்கு, சர்வதேச தொழில் விதிகளைப் பின்பற்றுதல் மிகவும் அவசியம்.இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையோடு நின்றுவிடாமல், நல்ல முடிவுகளை எடுக்க இந்தியாவை வற்புறுத்த வேண்டும் என்றார்.
மேலும், இது மிகவும் முக்கியமான பிரச்சனை. பல நாட்டு மக்களின் வேலை வாய்ப்பு தொடர்பான பிரச்சனை, உற்பத்தித் துறை சார்ந்த பிரச்சனை. வெகு நாட்களாக், இது நீடித்து வருகிறது. அமெரிக்க அரசாங்கம் இந்தியாவின் இந்தச் செயல்கள் குறித்து தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். கடந்த 18 மாதங்களில், இந்தியா செய்த தவறான வர்த்தக முறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று டெம்ப்சே தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சர்வதேச அறிவுசார்ந்த சொத்துரிமை இயக்கத்தின் துணைத் தலைவர், மார்க் எலியட் கூறுகையில்,அறிவுசார்ந்த சொத்துரிமையை இந்தியா கையாளும் முறை, பல காலமாகவே பிரச்சனைக்குரியதாக உள்ளது. ஆனால், கடந்த 18 மாதங்களில், இந்தப் பிரச்சனை மிகவும் முற்றிவிட்டது. சில குறிப்பிட்ட மருந்து துறை நிறுவங்களின், அறிவுசார்ந்த சொத்துரிமைப் பிரச்சனையை, இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.
அறிவு சார்ந்த சொத்துரிமை குறித்த சர்வதேச விதிகளைப் பின்பற்றாமல் இருக்கிறது இந்தியா. அறிவு மற்றும் கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளதாரத்தை உருவாக்குவதில் இந்தியாவின் பங்கு கேள்விக்குறியாகிறது. வலிமையான அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, அந்நிய முதலீடுகளை அதிகரிக்கும் என்பது உண்மை.இவ்வாறு சர்வதேச அறிவுசார்ந்த சொத்துரிமை இயக்கத்தின் துணைத் தலைவர், மார்க் எலியட் கூறினார்.
120 கோடி மக்கள் தொகைகொண்ட இந்தியாவில், அறிவுசார் காப்புரிமை என்ற பெயரில் அத்தியாவசிய புற்றுநோய்க்கான மருந்தை 10 மடங்கு அதிகமான விலைக்கு விற்பது எவ்விதத்தில் நியாயமான வர்த்தகம் என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை !