இந்திய வென்சர் கேப்பிடல் மற்றும் ப்ரைவேட் ஈக்விட்டி அசோசியேசன் (IVCA), மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் கொள்கை அமலாக்கம் பற்றிய தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அது மேலும், அதிகரித்து வரும் நிச்சமற்ற பொருளாதார கொள்கை மற்றும் தாமதப்படும் கொள்கை அமலாக்கத்தின் காரணமாக இந்தியா ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான முதலீடுகளை இழந்து வருகின்றது எனத் தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சார்ந்த இந்தச் சங்கம் பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறை நீண்ட காலத்திற்கு உதவாது என எச்சரித்துள்ளது. மேலும் அது அந்நிய முதலீட்டாளர்களின் இந்திய முதலீடு அளவு மிகவும் குறைந்து வருகின்றது. ஏனெனில் அந்நிய நிதி முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதைப் பற்றி மிகுந்த கவனமுடன் இருக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுடன் பேசிய IVCA தலைவர் மகேந்திர ஸ்வரூப், " நிச்சயமற்ற பொருளாதார தன்மையின் காரணமாக, இந்தியா அடுத்து வரும் சில ஆண்டுகளில் 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான முதலீட்டை இழக்க நேரிடும்", என்று கூறினார். இந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழக்கும் என அவர் தெரிவித்தார்.
"பொருளாதார நிலை கடினமானக உள்ளது, அது மேலும் கடுமையடைந்து வருகின்றது. தேர்தல் அருகில் வருவதால் கொள்கை அமலாக்க்கத்தில் நிச்சயமற்ற தன்மை நிழவுகின்றது ' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.