டெல்லி: முதன்மை பொருளாதார ஆலோசகரான திரு ரகுராம் ஜி.ராஜன் அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அடுத்த கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கவர்னரான திரு டி.சுப்பாராவ் அவர்களின் 5 ஆண்டு கால பணிக்காலம், வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியோடு முடிவடைவதால் அவருக்கு மாற்றாக பணியிலமரப் போவது திரு ராஜன் அவர்கள், இம்மத்திய வங்கியின் 23-வது கவர்னராக இருப்பார்.
மன்மோஹன் சிங்கின் ஒப்புதல்
"பிரதமர் திரு மன்மோஹன் சிங் அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்து விட்டார்." என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று கூறுகிறது.
ரகுராம் ஜி.ராஜன்
முன்னாள் ஐஎம்எஃப் (IMF)-இன் முதன்மை பொருளாதார நிபுணராக விளங்கிய ராஜன், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தின் போது நிதியமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆர்பிஐயின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளப் போகும் ராஜன், உலகளாவிய பொருளாதார நிலையாமை மட்டுமல்லாது, வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு, வளர்ச்சியில் காணப்படும் சரிவு, உயர்ந்து கொண்டிருக்கும் சில்லறை பண வீக்கம் போன்ற ஏராளமான சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
பதவிகளும் பாராட்டுக்களும்!!
வெளிப்படையாக தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு பெயர் போன ராஜன் அவர்கள், பிரதம மந்திரிக்கு கௌரவ பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டில் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடியை முன்பே கணித்ததற்காக மிகவும் புகழப்பட்டார்.
ராஜனின் கல்வி தகுதிகள், மெய் சிலிர்க்க வைக்கிறது!!!
ஐஐஎம்-அஹமதாபாத் மற்றும் ஐஐடி-தில்லி ஆகிய கல்வி நிறுவனங்களின் பழைய மாணவராகிய ராஜன், மசாச்சூட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார். சிஇஏவாக பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன் இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். திட்டக்கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட நிதித்துறை சீர்திருத்தங்கள் பற்றிய தகவலறிக்கை சமர்ப்பிப்பதிலும் இவர் பங்காற்றியுள்ளார்.