சென்னை: ஒட்டுமொத்த சந்தையே தலைகுப்புறக் கவிழும்போது, டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மகேந்திரா போன்ற தகவல் தொழிநுட்ப நிறுவன பங்குகள் உச்சாணிக்கொம்பை தொட்டதின் ரகசியம் என்னவாக இருக்கும். கடந்த சில நாட்களில் மேற்சொன்ன பங்குகள் 52 வார விலை உச்சத்தை தொட்டுள்ளன.
டெக் மகேந்திரா 52 வார விலை உச்சமான 1,346 ரூபாயை தொட்டது. அதைப்போல விப்ரோவின் பங்கு விலையும் 472 ரூபாய், இன்ஃபோசிஸ் 3,094 ரூபாய் விலை உச்சங்களை தொட்டன. டாடா கன்சல்டன்சி பங்குகள் ரூ 1,890க்கு உயர்ந்து அதிகபட்ச விலையை தொட்டன.
இந்த பங்குகள் 52 வாரம் அதிகபட்ச விலையை அடைய காரணங்கள் நிறைய உள்ளன. முதலில், இந்த நிறுவனங்களின் இலாப நட்ட முடிவுகள் மற்றும் வழிகாட்டல் அளவீடுகள் சிறப்பானதாக அமைந்தன. இந்த போக்கை கடந்த மாதம் இன்போசிஸ் தொடங்கி வைத்தது.
காலாண்டு முடிவுகள் சிறப்பாக அமைந்தது
2014 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகள் சிறப்பாக அமைந்ததோடு மட்டுமில்லாமல் அவற்றின் டாலர் வருவாய் வழிகாட்டல் அளவீடுகளும் குறிதவறவில்லை. ஹெச்சிஎல் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மிக சிறப்பானதாக அமைந்தன. விப்ரோ நிறுவனத்தின் முடிவுகளும் ஊக்கமருந்தாக அமைந்தது.
ஆய்வாளர்களின் கருத்து
ஆய்வாளர்கள் தொழில்நுட்ப துறைக்கு ஆதரவாக நிறைய விஷயங்கள் உள்ளன என்று யூகிக்கின்றனர். முதலாவதாக ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி மென்பொருள் நிறுவனங்களின் இலாப அளவை அதிகரிக்க உதவுகிறது. இரண்டாவதாக இந்திய ஐடி நிறுவனங்களின் பெரிய சந்தையாக உள்ள அமெரிக்க பொருளாதாரம் மீட்பு நிலைமையை நோக்கி வலிமையான பாதையில் நடைபோடுகிறது.
அனைத்தும் பங்குகளுக்கும் பலத்த அடி
மூன்றாவதாக வங்கி, உள்கட்டமைப்பு, உலோக, கட்டுமான மற்றும் மின் துறை பங்குகள் அனைத்தும் பலத்த அடி வாங்கி வருகின்றன. 52 வார விலை உச்சத்தை தொட்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப மற்றும் மருந்து உற்பத்திதுறை தவிர வேறு எங்கும் திரும்ப முடியாதபடி அடிவிழுவதால் முதலீட்டாளர்கள் இத்துறைகளை நோக்கி செல்கின்றனர்.
ஐடி துறைக்கு ராஜயோகம்
மற்ற துறைகள் பலவீனமாக இருக்கும் வரை முதலீட்டாளர்கள் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப பங்குகளை நோக்கியே செல்வர் என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.
ஐடி துறையின் முக்கிய பிரச்சனை
தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு காதில் கேட்டாலே கசக்கும் செய்தி ஒன்றும் இருக்கிறது. தற்போதைய வடிவத்தில் அமெரிக்க குடியேற்ற மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும்.