சென்னை: பொருளாதார மந்த நிலையினால் ஏற்கெனவே மவுசு குறைந்து காணப்படும் இந்திய ரியல் எஸ்ட்டேட் துறை அடுத்தடுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இத்துறை, பல்வேறு காரணிகளால் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக் காரணிகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
நில கையகப்படுத்துகை மசோதா
நில கையகப்படுத்துகை மசோதா, டெவலப்பர்கள் வாங்கும் நிலங்களின் விலையை அதிகரித்துள்ளது, இந்த சூழலில் டெவலப்பர்கள் இந்த அதித விலை அதிகரிப்பை நுகர்வோரின் தலையில் தான் கட்டுவர் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். ரியல் எஸ்டேட் துறையின் மவுசு மங்கிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்த விலை அதிகரிப்பு இத்துறையை மேலும் கவலைக்கிடமாக ஆக்கிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.
புதுமையான வீட்டுக்கடன் திட்டங்கள்
வங்கிகள் வழங்கக்கூடிய வீட்டுக் கடன், சொத்தின் கட்டுமான நிலையைப் பொறுத்தே பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்றும் டெவலப்பர்களுக்கு நேரிடையாக மொத்தத் தொகையும் வழங்கப்படக்கூடாது என்றும் ஆர்பிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு புதுமையான 80:20 அல்லது 75:25 வீட்டுக் கடன் திட்டங்களுக்கு மிகப் பெரிய அடியாகும். ஏனெனில், இனி மேற்கொண்டு டெவலப்பர்கள், கடன் பெற்றுள்ள தனியொரு நபரின் சார்பாக, முடிவடையாத/கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கிற/பச்சை நில வீட்டு வசதித் திட்டங்கள் போன்றவற்றிற்கு வீட்டுக்கடன் பெற இயலாது. இது இத்துறைக்கு விழுந்த மேலும் ஒரு அடியாகும்.
வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் உயர்வு!!
ரூபாயின் சரிவை தூக்கி நிறுத்தும் பொருட்டு, ஆர்பிஐ லிக்விடிட்டியை இறுக்கியுள்ளதால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. ஹெச்டிஎஃப்சி வங்கி வட்டி விகிதங்களை 10.15 சதவீதத்திலிருந்து 10.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கும்பலோடு கோவிந்தாவாக, எல்ஐசி வீட்டுக் கடன் நிறுவனமும் வட்டி விகிதங்களை சுமார் 35 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. எனவே சராசரியாக வர்த்தக வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்கள் வீட்டுக்கடன்கள் மீதான வட்டி விகிதங்களை சுமார் 20-30 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளன. இது வீட்டுக்கடன் வாங்குவோர்க்கு கூடுதல் சுமையாக இருக்கும்.
அதிகமான உள்ளீட்டு விலைகள்
உள்ளீட்டு விலைகளின் அதிகரிப்பினால் எழக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ரியல் எஸ்டேட் துறை, இந்த விலை அதிகரிப்பை கடைநிலை நுகர்வோர் அல்லது சொத்து வாங்குவோரின் தலையில் கட்டிவிடவே யத்தனிக்கும். சில சந்தர்ப்பங்களில், உள்ளீட்டு விலையில் ஏற்படக்கூடிய உயர்வானது சில உள்கட்டமைப்பு திட்டங்களை செயலற்றதாக்கி விடும் சாத்தியக்கூறும் உள்ளது.